கோனே பால்ஸ்சும் நாங்களும்


நான் சங்கர், நாகராஜன், பாலாஜி, கணியன், கலைவாணன் ஆகியோர் கோனே நீர்வீழ்ச்சிக்கு செல்வதுஎன முடிவெடுத்து 15.10.2012 அன்று காலை பயணமனோம். காலை 9 மணியளவில் எங்கள் பயணம் ஆரம்பமானது. கிண்டி வழியாக போருர் சாலையின் வழியோ பெரியபாளையம் செல்லும் வழியில் பயணித்தோம் வழியில் ஒரு இடத்தில் ஓட்டலில் காலை உணவை முடித்துக்கொண்டோம்.

ஊத்துக்கோட்டை வரை தமிழக எல்லை பரந்து கிடந்தது. உத்துக்கோட்டைதான் இருமாநிலங்களையும் பிரிக்கும் எல்லையாக உள்ளது. போகும் வழியெங்கும் சுற்றி மாலைகளும், வயல்களும், கரும்புதோட்டங்களும், ரோஜா தோட்டங்களும் நம்மை இயற்கை எழிலுடன் வரவேற்றன.

புத்தூருக்கு 8 கிலோமீட்டர் முன்னதாக இடதுபக்கம் கோனே நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வளைவு நம்மை வரவேற்கின்றன. உள்ளே ஒரு இரண்டு கிலோமீட்டர் சென்றால் நீர்வீழ்ச்சி வரும். போகும் வழியில் ஒரு சாலை கீழ்இருந்து மேலேசெல்வது போல் அழகாக உள்ளது. ஒருவழியாக போய்சேர்ந்தோம்.

வண்டியை நிறுத்தியதும் பலர் வந்து நம்மிடம் கோழிவாங்கி கொடுத்தால் சமைத்துகொடுப்பதாக சொன்னார்கள். இங்கு எதுவும் கிடைக்காது என்று நினைத்து நாங்கள் வரும் வழியில் பிரியாணி வாங்கி வந்துவிட்டோம். ஆகவே வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்.

நீர்வீழ்ச்சி நோக்கி நடக்க தொடங்கினோம். அங்கே ஆயில் மசாஜ் செய்ய ஆட்கள் நிறைய பேர் இருந்தார்கள். காசுகொடுத்து அடிவாங்க வேண்டாம் என்று குளிக்கும் இடம்நோக்கி பயணமானோம்.
ீர்வீழ்ச்சியின் அருகில் சென்றதும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. சுமாராக ஒரு பத்துபேர்நின்று குளிக்கக்கூடிய அளவில்தான் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. ஆகவே மேலே சென்று குளிக்கலாம் என்று சிலர் கூறியதால் மேலே ஏறத்தொடங்கினோம். பாதிதூரம் ஏறியிருப்போம் மேலிருந்து சிலர் இறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எவ்வளவு தேடியும் நீர்வீழ்ச்சியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்கள், மேலே ஏறுவது வீண்முயற்சி என்றார்கள். இதில் கணியன் முடியாமல் உட்கார்ந்து விட்டார் எனவே நாங்கள் இருந்து இடத்திலேயே ஏறுவதை நிறுத்திவிட்டோம்.

மதியம் 12.30 மணி ஆகியிருந்தது. ஆகவே அங்கேயே கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்து, மதியம் உணவை உண்டுவிட்டு கீழே சென்று குளிக்கலாம் என்று முடிவெடுத்தோம். அங்கேயே அமர்ந்து அரட்டை அடித்தோம். அங்கிருந்து பார்த்தால் ஆந்திரா மாநிலத்தின் அழகை ரசிக்க முடிந்தது. மதியம் அங்கேயே சாப்பிட்டோம், பிரியாணி பொட்டலத்தை திறந்தது தான் தாமதம் எங்கிருந்து தான் குரங்குகள் வந்தது என்று தெரியாது நாலைந்து குரங்குள் எங்களை சூழ்ந்து உட்கார்ந்து கொண்டன. நாங்கள் சாப்பிட்டதும் மீதியை அவைகளுக்கு கொடுத்தோம். ஒரு குரங்கு நாங்கள் சாப்பிட வைத்திருந்த பழங்கள் உள்ள கவரை தூக்கிக்கொண்டு சென்றது. எங்களுக்கு கோபம் வரவில்லை. அதை ரசிக்கதான் தோன்றியது.

2 மணியளவில் கீழே இறங்கினோம். கலைவாணன், கணியன் ஆகியோர் குளிக்கவில்லை என்றார்கள். நாங்கள் நால்வரும் குளிக்க தொடங்கினோம். அருமையான குளியல், தண்ணீர் நடுமண்டையில் கொட்டும்போது ஏற்படும் உற்சாகத்தை அனுபவித்தால் தான் தெரியும். சுமார் முக்கால்மணிநேரம் குளித்திருப்போம். கொஞ்சம் நேரம் ஆனதும் குளிரத்தொடங்கியது. ஆகவே குளியலை முடித்துக்கொண்டோம்.

அங்கிருந்து வண்டியில் ஏறினோம் போகும் வழியில் நிறைய இடங்களில் நிறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கரும்புத்தோட்டத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். பின்னர் ஒரு அணைக்கட்டில் நிறுத்தினோம் கொஞ்சம் மழைபெய்ய ஆரம்பித்திருந்தது. மழையில் நனைந்தப்படி கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வந்தோம்.

சுமார் ஆறுமணியவில் சென்னை வந்து சேர்ந்தோம். இதுபோன்ற பயணங்கள் நமது இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையின் வரும் நாளைக்கான ஓட்டத்தை தொடர ஒரு சிறந்த ஊக்கத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. மற்றொரு பயணத்துடன் மீண்டும் சந்திப்போம்

Comments

Popular Posts